சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்:சென்னை மாணவர்கள் சாதனை
சென்னை:சென்னை மண்டலத்திற்கான சிபிஎஸ்இ பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் சென்னை மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் தேறி சாதனை படைத்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் மத்திய கல்வி தேர்வு வாரியத்தின் (சிபிஎஸ்இ) பத்தாவது வகுப்பு தேர்வுகள் நடந்தன. இதற்கான முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
முழுமையான தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ அலுவலகம் இன்று பிற்பகலுக்கு மேல் அறிவிக்கும் என்று தெரிகிறது. தற்போது இணையதளத்தில் மட்டுமே முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தத் தேர்வில் சென்னையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களுடன் தேறியுள்ளனர். கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவர் நவீன்குமார், முகப்பேர் டிஏவி பள்ளி மாணவி செளம்யா ஆகியார் தலா 491 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
முகப்பேர் பள்ளியைச் சேர்ந்த நிதர்ஷனா, அபர்ணா ஆகியோர் தலா 485 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சுஷில்ஹரி சர்வதேச பள்ளி சாதனை:
சிபிஎஸ்இ பத்தாவது வகுப்பு தேர்வில் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளி 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளது. பரீட்சை எழுதிய அத்தனை மாணவ, மாணவியரும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ளனர்.
பள்ளியிலேயே முதல் மாணவராக ஆர்.சபரீஷ்குமார் 500க்கு 472 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதத்தில் இவர் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மேலும், இவருக்கு கணிதத்தில் அகில இந்திய அளவிலும் ரேங்க் கிடைத்துள்ளது.
சபரீஷ் குமாரின் மதிப்பெண்கள்
ஆங்கிலம் 90,
மொழிப் பாடம் 92,
கணிதம் 100,
அறிவியல் 96,
சமூக அறிவியல் 94.
இவர் தவிர கே.நீரஜா 432 மதிப்பெண்களும், சுமேகா ராவ் 427 மதிப்பெண்களும், எஸ்.அத்வைத் ஆரோன் 415 மதிப்பெண்களும், ஆர்.கிருஷ்ணகுமார் 411 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர் என்று பள்ளியின் தாளாளர் எஸ்.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை மற்றும் ஆஜ்மீர் மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்களில் காணலாம்
www.results.nic.in
www.cbseresults.nic.in
www.cbse.nic.in