மதுரை இடைத் தேர்தல்-அதிமுக சார்பில்காளிமுத்து மகன் அண்ணாத்துரை போட்டி?
மதுரை:மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாத்துரையை நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ எஸ்வி சண்முகம் கடந்த பிப்ரவரி மாதம் மரணமடைந்தார். இதையடுத்து இத் தொகுதியில் வரும் ஜூன் 26ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேற்குதொகுதியில் கடந்த முறை திமுக கூட்டணியான காங்கிரஸ் போட்டியிட்டது. எனவே இந்த முறையும் காங்கிரசுக்கே இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்பாளர் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதேபோல தேமுதிக, பாஜக கட்சிகளும் யாரை வேட்பாளராக நிறுத்துவது என தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
அதிமுகவை பொறுத்த வரை முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாத்துரை, முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ, எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எம்எஸ் பாண்டியன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.
இதில் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாத்துரைக்கு சசிகலாவின் ஆதரவும் உள்ளதால் அவரே நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த தொகுதியில் முக்குலத்தோர் சமூக வாக்காளர்கள் சுமார் 75,000 பேர் உள்ளனர். டேவிட் அண்ணாத்துரையும் முக்குலத்தோர் என்பதால் அவரையே வேட்பாளராக நிறுத்த அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.