தொடர் மழை-ஊட்டியில் நிலச்சரிவு:பஸ்-ரயில் போக்குவரத்து பாதிப்பு
மேட்டுப்பாளையம்:தொடர் மழையால் ஊட்டியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந் நிலையில் மேட்டுப்பாளையம், ஊட்டி மெயின் ரோட்டில் பர்லியார்-மரப்பாலம் இடையே நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் ராட்சத பாறைகள் ரோட்டியில் உருண்டு விழந்தன. இதனால் மேட்டுப்பாளையம், ஊட்டி மெயின் ரோட்டில் நேற்று இரவு முதல் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
மேலும் மேட்டுபாளையம், ஊட்டி மலை ரயில் பாதையில் சில்குரோவ்-நன்னிமேடு ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தில் ராட்ச பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் விழுந்துள்ள பாறைகளை அகற்றும் பணிக்காக ஊழியர்கள் விரைந்துள்ளனர்.
கனமழை காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலை ரயில் பாதையில் 22க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.