தமிழக மின் திட்டங்கள்- பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை
டெல்லி:எண்ணூர் அணுமின் நிலையத்திற்காக பயன்படுத்தப்படும் கடல் நீரின் வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நடந்த மாநில முதல்வர்கள் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்களின் கருத்தரங்கில் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி கலந்துக் கொண்டு, முதல்வர் கருணாநிதியின் உரையை வாசித்தார்.
அதன் விவரம்
தமிழகத்தில் மின்துறை தொடர்பாக சில கருத்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மின்சார தேவையில் தமிழ்நாடு தன்னிறைவு எட்டியுள்ளது.
தமிழகத்தில் எந்த பகுதியிலும் மின்வெட்டு கிடையாது. இந்தியாவிலேயே தமிழ்நாடு மின்சார வாரியம் சிறந்ததாக செயல்படுகிறது. மின் பகிர்வின் இழப்பீடு 18 சதவீதமாகவும், கட்டண வசூல் 99 சதவீதமாகவும் உள்ளது.
மரபுசாரா எரிசக்தியிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தியில் 60 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தியாகிறது.
தூத்துக்குடி, மேட்டூர், வட சென்னை ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
மேலும் 1,000 மெகாவாட் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரியம்-என்டிபிசி நிறுவனத்தின் கூட்டு திட்டம், தூத்துக்குடியில் என்எல்சி-தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கூட்டு திட்டம், ஜெயங்கொண்டத்தில் என்எல்சியின் மின் உற்பத்தி திட்டம் ஆகியவை 11வது ஐந்தாண்டு திட்டத்தில் நிறைவேற்றப்படும்.
இதுதவிர இப்போதுள்ள அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. உடன்குடியில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் உற்பத்தி திட்டம் கொண்டு வரப்படுகிறது.
உங்களது (பிரதமர்) பரிசீலினைக்காக சில கோரிக்கைகளை இங்கே வைக்கிறோம்.
தமிழக அரசு கூட்டுத் திட்டத்தின் கீழ் இரண்டு மெகா கூட்டு அனல் மின் திட்டங்களுக்களை உருவாக்கி வருகிறது. இந்த திட்டங்களுக்காக மத்திய மின்சாரத்துறையின் அனுமதியை பெறவும் சுங்க வரியிலிருந்து விலக்கு பெறவும் சில நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டிய நிலையுள்ளது.
10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையுள்ள நகரங்களில் மின்சார வினியோகத்தில் தனியாருக்கு பங்களிக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இந்த நிபந்தனையை கடைபிடிக்கும்படி வற்புறுத்தக் கூடாது. இப்படி வற்புறுத்தியதால் இந்த மெகா மின் உற்பத்தி திட்டத்தை நிறைவேற்றிட தாமதம் ஏற்படும்.
தமிழக மின்சார வாரியத்திற்கு, அனல் மின் உற்பத்திக்காக ஆண்டுக்கு 1.5 கோடி டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் 1.3 கோடி டன் நிலக்கரி தான் நிலக்கரி இந்திய நிறுவனம் அளித்து வருகிறது. மீதி 20 லட்சம் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம்.
எனவே ஒரிஸ்ஸா மாநிலத்திலுள்ள தால்சர் பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்திலிருந்து நேரடியாக நிலக்கரி கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாநில மின்சார வாரியங்கள் தங்கள் மின்சார நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள், சீரமைப்புகள் ஆகியவற்றை செயல்படுத்த காலக் கெடு விதிக்கக்கூடாது.
மின் திட்டங்களை சீரமைத்து நிதிநிலையை சீர்படுத்திக் கொள்ளும் மின்சார வாரியங்களுக்கும், மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. அதே போல வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்தும், மின் பகிர்வில் இழப்புகளை கணிசமாக குறைந்தும் புதிய திட்டங்களை வகுத்தும் செயல்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.485.50 கோடி ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதல் பிரிவு 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்க இருந்தது. ஆனால் அது 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 2008ம் ஆண்டு கோடைக்காலத்தில் மின் தேவை அதிகரிக்கும். எனவே கூடங்குளம் மின் உற்பத்தியை விரைவில் தொடங்கமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் 3 சுயமின் உற்பத்தி நிறுவனங்கள் மின் உற்பத்தி செய்து வருகின்றன. எல்எஸ்எச்எஸ் எரிபொருளை இவை பயன்படுத்து வருவதால், இந்த நிறுவனங்களுக்கு எல்எஸ்எச்எஸ் உற்பத்தி செய்வதிலிருந்து உற்பத்தி வரிவிலக்கு அளிக்க வேண்டும்.
தூத்துக்குடி, வடசென்னை, எண்ணூர் ஆகிய அனல்மின் நிலையங்களில் கண்டென்சர்களை குளிர்விப்பதற்காக கடல்நீரை எடுத்து, அதில் சிறிதளவு நீரை பயன்படுத்திவிட்டு மீதியை கடலுக்கே திருப்பி விடுகிறார்கள். ஆனால் எடுக்கப்படும் கடல்நீர் முழுவதற்கும் செஸ் வரி விதிக்கப்படுகிறது. அந்த வரியை ரத்து செய்து சட்டம் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அந்த உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.