நதிப் பிரச்சினைகளால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் வரும் - கருணாநிதி எச்சரிக்கை
டெல்லி:மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால், எதிர்காலத்தில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பெரும் பங்கம் நேரும் அபாயம் உள்ளது என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
டெல்லியில் இன்று 53வது தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங் இதற்குத் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உரையாற்றினார்.
அவர் கூறுகையில்,
மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க தற்போது உள்ள சட்டப்பூர்வமான அமைப்புகள் கண்ட வழிகள் அனைத்தும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த அமைப்புகளின் முயற்சிகள் அனைத்தும் முறிந்து போய் விட்டன.
இதற்கு ஒரே தீர்வு, நாட்டில் ஓடும் நதிகளை தேசியமயமாக்குவதுதான். இது மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வாக அமையும். இந்த நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என பிரதமரை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தென்னக நதிகளை இணைப்பது தொடர்பான ஆய்வு முடிந்து, அந்தத் திட்டம் சாதகமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 11வது திட்டத்தில், தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்தை சேர்க்க வேண்டும். அதற்குரிய நிதியையும் ஒதுக்க வேண்டும்.
தமிழகம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களையே தனது குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்காக பெரிதும் நம்பியுள்ளது. பரஸ்பர பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், நடுவர் மன்றம், நீதிமன்றங்கள் ஆகியவை பல்வேறு உத்தரவுகளை, தீர்ப்புகளைப் பிறப்பித்தும் இவை எதுவும் தமிழக நலனைக் காக்கத் தவறி விட்டன.
இந்த மூன்று அண்டை மாநிலங்களும் தங்களிடம் உள்ள உபரி நீரைத் தமிழகத்திற்குத் தர பிடிவாதம் பிடிக்கின்றன. ஆனால் வீணாக கடலில் கொண்டு போய்ச் சேர்க்கின்றன. இது நமது இறையாண்மைக்கு உகந்த விஷயமாகத் தெரியவில்லை.
தற்போதுள்ள சிக்கலைத் தீர்க்க உடனடியாக பெரிய அறுவைச் சிகிச்சையே செய்தாக வேண்டிய நிலை உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு ஆறுதல் அளிக்கும் மருந்து கூட இதுவரை அளிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.
அண்டை மாநிலங்களுடன் பன்னெடுங்காலமாக தமிழகம் கொண்டுள்ள உறவு, நட்பு பிளவுபடாமல் நீடிக்க வேண்டுமானால், தமிழகத்திற்கு உதவ மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தற்போதுள்ள சட்ட அமைப்புகளால் மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை. தமிழகத்திற்கு உதவ முடியவில்லை. எனவே இதை உடனடியாகத் தீர்க்க முன்வராவிட்டால் எதிர்காலத்தில் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பெரும் பாதகம் ஏற்படும் நிலை உருவாகும்.
தமிழகத்தை தனி விவசாய சூழ்நிலை கொண்ட பிரதேசமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் நீர்ப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை மத்திய அரசு செய்ய வேண்டும்.
மேலும், தமிழகத்தில் விவசாய, வன, தோட்டக்கலை மற்றும் குடிநீர்ப் பற்றாக்குறைப் பயிர்களுக்கென தனி மத்திய உதவியையும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறினார் கருணாநிதி.