ஆப்ரோ-ஆசிய கோப்பை-சச்சின் விலகல்:கங்குலி, ஜாகீர் கான் அணியில் சேர்ப்பு
கோலாலம்பூர்ஆப்பிரிக்க லெவன் அணிக்கும் ஆசிய லெவன் அணிக்கும் இடையிலான ஆப்ரோ-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து சச்சின் டெண்டுல்கர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆசிய லெவன் அணியில் கங்குலியும், ஜாகீர் கானும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க லெவன் அணிகளுக்கும், ஆசிய லெவன் அணிக்கும் இடையிலான ஆப்ரோ-ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 6ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையே 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு 20-20 போட்டி நடைபெறவுள்ளது.
முதல் போட்டி ஜூன் 6ம் தேதி பெங்களூரில் நடக்கிறது. 2வது போட்டி 9ம் தேதியும், 3வது போட்டி 10ம் தேதியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகள் அனைத்தும் பகல் இரவு ஆட்டமாக நடைபெறும்.
இந்த போட்டியில் ஆப்பிரிக்க லெவன் அணிக்கு கேப்டனாக தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்க லெவன் அணியில் தென் ஆப்பிரிக்கா, கென்யா, ஜிம்பாவே அணி வீரர்கள் இடைபெற்றுள்ளனர்.
ஆசிய அணியின் கேப்டனாக இலங்கை அணி கேப்டன் ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரு அணிகளுக்கான தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந் நிலையில் ஆசிய லெவலில் இருந்து சச்சின் டெண்டுல்கர் விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் எதற்காக விலகினார் என்று தெரியவில்லை.
மேலும் இலங்கை வீரர்கள் வாஸ், மலிங்கா ஆகியோரும் இந்தப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு பதிலாக இந்திய வீரர்கள் சவுரவ் கங்குலி, ஜாகீர் கான், இலங்கை வீரர் பெர்னாண்டோ, வங்கதேச வீரர் மொர்தாசா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதே போல 20-20 ஓவர் போட்டிக்கான ஆசிய அணயில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டள்ளது. முனாப் பட்டேலுக்கு பதிலாக ஸ்ரீசந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.