குழந்தைகள் தவிர அனைவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்
கோவை:கைக் குழந்தைகள் தவிர அனைவரும் ஹெல்மெட் அணிவதும், காரில் செல்வோர் இடுப்பு பெல்ட் அணிவதும் கட்டாயமாகிறது என தமிழக போக்குவரத்துத்துறை கமிஷ்னர் சி.பி.சிங் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. சாலைகளி்ல் பல்வேறு விதமான வாகனங்கள் செல்கின்றன. எளிதில் தீப்பற்றக் கூடிய பெட்ரோலிய பொருட்கள், ரசாயன பொருட்கள் சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
பொது மக்களின் பாதுகாப்பு கருதி இரு சக்கர வாகனங்களில் செல்வோர், கைக்குழந்தைகள் தவிர, அனைவரும் ஜூன் 1ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். ஹெல்மெட் மீது உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பெயர், விலைப் பட்டியல் போன்றவை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் காரில் செல்பவர்கள் இடுப்பு பெல்ட் அணிவதும் கட்டாயமாகிறது. இந்த இடுப்பு பெல்ட் அணிவது மூலம் விபத்தில் சிக்கினாலும் உயிரிழப்பை தவிர்க்கலாம்.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவதும், காரில் செல்பவர்கள் இடுப்பு பெல்ட் அணிவதும் வரும் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படும். இதில் மாற்றம் கிடையாது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகின்றனர். இதனால் அதிக விபத்துகள் நடக்கின்றன. இதுபோன்ற மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரின் உரிமம் 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்படும். மீண்டும் இந்த செயல்களில் ஈடுபட்டால் அவரது உரிமம் முழுமையாக ரத்து செய்யப்படும்.
வாகனங்களில் டிரைவர்கள் தவறு செய்யும்பட்சத்தில் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
16 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் கியர் கொண்ட வாகனங்களை ஓட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் 17 ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை நடத்தி வருகிறது. பொதுமக்கள் இந்த பள்ளி்களின் மூலம் முறையான ஓட்டுனர் பயிற்சியை பெறலாம் என்றார் போக்குவரத்துத்துறை கமிஷ்னர் சி்ங்.