மதுரை மேற்கு தொகுதி- பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம்
மதுரை:மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தல் எந்த பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் வரவழைக்கப்படவுள்ளது.
இத் தொகுதியில் ஜூன் 26ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு மொத்தம் 1.48 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக 216 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
முதன் முறையாக இந்த தொகுதியில் புகைப்பட வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலில் எந்த விதமான அசம்பாவித சம்பவமின்றி அமைதியாக தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியாளர், போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன் படி புகார்களுக்கு உள்ளான (திமுக ஆதரவாளர்கள் என) போலீஸ் அதிகாரிகளுக்கு இடைத் தேர்தலில் எந்தப் பணியும் வழங்கக்கூடாது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது.
இந் நிலையில் மதுரை போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் மேற்கு தொகுதியில் அனைத்து ஓட்டுச் சாவடிகளையும் ஆய்வு செய்தார்.
வாக்குச்சாவடிகள் முன் பொதுமக்கள் நிற்க பந்தல் அமைக்க உத்தரவிட்டார்.
மேலும் மேற்கு தொகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் யாருக்கும் கேன்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது. வழங்கினால் பங்க் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பெட்ரேல் பங்க் உரியமையாளர்களை எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் இடைத்தேர்தல் பாதுகாப்பு அளிக்க மாநில போலீசார் 3,000 பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வாக்குச் சாவடிகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மொத்தமுள்ள 216 வாக்கு சாவடிகளில் 112 வாக்கு சாவடிகள் பதட்டமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவ படைகள் நிறுத்தப்படவுள்ளன.