தமிழக மீனவர்களைக் காக்கமத்திய, மாநில படைகள் கூட்டு ரோந்து
டெல்லி: தமிழக மீனவர்களை பாதுகாக்க தமிழக கடலோரப் பகுதிகளில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியுள்ளார்.
டெல்லி சென்றுள்ள முதல்வர் கருணாநிதி, நேற்று இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்தார். அப்போது கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சமீபத்தில் கடத்தப்பட்டதும், சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் முக்கியமாக விவாதித்தார்.
இதையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நாளை உங்களை சந்தித்து இதுகுறித்து விவாதிப்பார் என தெரிவித்தார். அதன்படி இன்று காலை எம்.கே.நாராயணன், முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
முதல்வரை சந்தித்து விட்டு வந்த எம்.கே.நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து தமிழக கடலோரப் பகுதிகளில் கூட்டு ரோந்தில் ஈடுபடும்.
இதுகுறித்து விரிவாகப் பேச வரும் 31ம் தேதி சென்னை வரவுள்ளேன். அப்போது முதல்வர் கருணாநிதியுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படும். அப்போது தமிழக மீனவர்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விவாதிக்கப்படும்.
விடுதலைப் புலிகள் வான்வழியாகவும், கடல்வழியாகவும் தாக்குதல் நடத்தும் அளவிற்கு உயர்ந்திருப்பதை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.
விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. தமிழகம் வரும்போது தமிழக முதல்வரிடம் இதுகுறித்தும் பேசப்படும் என்றார்.