ஜெ-சசி: கோடநாடு எஸ்டேட்டை ஆய்வு செய்யஅதிகாரிகளை தடுத்த அதிமுகவினர்
கோத்தகரி:சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு செந்தமான நீலகிரி கொடநாடு எஸ்டேட்டை போலீஸ் படையுடன் ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஜெயா டிவியின் நிர்வாகிகளில் ஒருவராக உள்ள இளவரசிக்கு சொந்தமான இந்த எஸ்டேட்டில் அரசு அனுமதியின்றி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இது குறித்து கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் கே.எம்.ராஜு தமிழக அரசிடம் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து ஆய்வு செய்ய கடந்த 21ம் தேதி அரசு அதிகாரிகள் எஸ்டேட்டிற்கு சென்றனர் ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந் நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் சமயமூர்த்தி தலைமையில், கோவை நகர ஊரக வளர்ச்சி அதிகாரிகள், கோடநாடு ஊராட்சித் தலைவர் மற்றும் கோத்தகிரி தாசில்தார் ஆகியோர் போலீஸ் படையுடன் அங்கு ஆய்வு செய்ய செய்ய சென்றனர். அப்போதும் எஸ்டேட் நிர்வாகத்தினர் அவர்களுக்கு அனுமிதி மறுத்தனர்.
அப்போது நிர்வாகத்துக்கு ஆதரவாக முன்னாள் அரசு வழக்கறிஞர் அனந்த கிருஷ்ணன், அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் தேவராஜ், கோத்தகிரி பார் அசோஷியேசன் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அங்கு வந்து அரசிடம் இருந்து வந்த ஸ்தல ஆய்வு கடிதத்தை தருமாறு கேட்டனர். ஆனால் எவ்வித கடிதமும் இல்லாததால் அதிகாரிகள் திணறினர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அரசு அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
பின்னர் அரசு அதிகாரிகள் மீண்டும் எஸ்டேட்டுக்கு வந்து நிர்வாகத்திடம் ஒரு கடிதத்தை கொடுத்தனர். அதில், தமிழ்நாடு நில அளவை சட்டப்படி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டடிருந்தது.
இதற்கு அதிமுக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காலையில் ஒரு கடிதமும், மாலையில் வேறொரு கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நில அளவை செய்ய உபகரணங்கள் கொண்டு வரப்படவில்லை. மேலும் நில அளைவ செயவதற்கான கால அவகாசமும் அளிக்கவில்லை. புகார் கொடுத்தவரின் விவரமும் இல்லை. இதனால் அரசிடம் முறையான முறையான கடிதம் கொண்டு வரும் வரை அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
இந் நிலையில் அரசு அதிகாரிகள் அனைவரும் எஸ்டேட் நுழைவாயில் தாண்டி 500 மீட்டர் உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அதற்கு மேல் செல்ல விடாமல் அதிமுகவினர் அதிகாரிகளை தடுத்து நிறுத்திவிட்டனர்.