பத்மபூஷன்: அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கத்துக்குப் பாராட்டு
சென்னை:பத்மபூஷன் விருது பெற்ற தொழிலதிபர் பொள்ளாச்சி. நா. மகாலிங்கத்திற்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கத்திற்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள பல்வேறு அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ணா மட தலைவர் சுவாமி கவுதமானந்தர் தலைமை தாங்கினார். தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், கவிஞர் வாலி, சென்னை வருமான வரித்துறை தலைமை ஆணையர் சி.ஆர்.ரவிச்சந்திரன், அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ.எம். ராமசாமி, பேராசிரியை இளம்பிறை மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மகாலிங்கத்தை பாராட்டிப் பேசினர்.
பொள்ளாச்சி மகாலிங்கத்தைப் பாராட்டி கவிதையாக பாடினார் கவிஞர் வாலி. நல்லி குப்புசாமி பேசுகையில்,
எனக்கு ரோல் மாடலாக இருப்பவர் மகாலிங்கம். அவருக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம். தனது வாழ்நாளை வள்ளலாருக்காகவும், காந்தியடிகளுக்காகவும் அர்ப்பணித்தவர் என்றார்.
சுவாமி கவுதமானந்தர் பேசுகையில்,
யார் கேட்டாலும் எந்த உதவியும் இல்லை என்று கூறாமல் செய்பவர் பொள்ளாச்சி மகாலிங்கம். அவரிடம் நான் எப்போது பேசினாலும் 3 விஷயங்கள் குறித்து மட்டுமே பேசுவார். விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், காந்தியடிகள் ஆகியோர்தான் அவர்கள் என்றார்.
சி.ஆர்.ரவிச்சந்திரன் பேசுகையில்,
பரம்பிக்குழம் ஆழியாறு திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் பொள்ளாச்சி மகாலிங்கம். இதனால் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதி விவசாயில் இன்றளவும் பயன் பெறுகிறார்கள். சோயா பீன்ஸ் அருமையை இந்தியாவுக்கே தெரிய வைத்தவர் என்றார்.
பாராட்டுக்களுக்கு ஏற்புரை நிகழ்த்தி பொள்ளாச்சி மகாலிங்கம் பேசுகையில்,
வள்ளலார் வாழ்ந்த பல இடங்கள் இந்து அறநிலையத் துறையின் கீழ் வருகிறது. அவற்றைப் பிரித்து அதன் நிர்வாகத்தை முதல்வர் தலைமையில் இயங்கும் தனித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்க வேண்டும். ஊராட்சிகள், பஞ்சாயத்து யூனியன்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
சென்னை நகரம் தான் என்னை உருவாக்கியது. இங்குள்ள லயோலா கல்லூரியில் தான் 1938ம் ஆண்டு முதல் 1942 வரை படித்தேன். சட்டமன்ற உறுப்பினராக 15 ஆண்டுகள் சென்னையில் இருந்தேன்.
சென்னை நகரில் இன்று போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விட்டது. இங்குள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்றார்.