வைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் கொண்டாட்டம்
மதுரை:வைகாசி விசாகத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று வழக்கமான கோலாகலத்துடன் பக்தர்கள் முருகப் பெருமானை வணங்கி அருள் பெற்றனர்.
தமிழ்க் கடவுள் முருகனின் ஜென்ம நட்சத்திரம் விசாகம். முருகப் பெருமான் அவதாரம் எடுத்த நாள் இது. இதுவே வைகாசி விசாகமாக கொண்டாடப்படுகிறது.
இந்தத் திருநாளில் முருகப் பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விசாகத்தையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று அதிகாலை முதலே மதுரையைச் சுற்றிலும் உள்ள முருக பக்தர்கள் பால் காவடி ஏந்தி திருப்பரங்குன்றம் வந்து முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து அருள் பெற்றனர்.
முருகப் பெருமான் தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதேபோல அறுபடை வீடுகளான திருத்தணி, சுவாமி மலை, திருச்செந்தூர், பழமுதிர்ச் சோலை (அழகர்கோவில்), பழனி ஆகிய கோவில்களிலும் விசாகத் திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.