பண்ருட்டி வாலிபர் சவூதியில் மாயம்!
பண்ருட்டி:சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த வாலிபர் மாயமாகி விட்டார். அவர் என்ன ஆனார் என்பது குறித்துத் தெரியாமல் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தாழம்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (35). கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவூதிக்கு வேலைக்குச் சென்றார்.
அங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் மாணிக்கவாசகம். இதற்காக ரூ. 80 ஆயிரம் பணத்தை ஒரு ஏஜென்ட்டிடம் கொடுத்து அவர் மூலம் சவூதி சென்றார்.
மே 12ம் தேதி தனது மனைவி அன்னபூரணிக்குப் போன் செய்தார் மாணிக்கவாசகம். தனது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அவரிடம் கூறினார்.
அதன் பின்னர் மாணிக்கவாசகத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அவருடைய செல்போனும் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 13ம் தேதி மாணிக்கவாசகத்துடன் வேலை பார்த்து வரும் சிலர், மாணிக்கவாசகம் பத்திரமாக ஊர் வந்து சேர்ந்தாரா என்று கேட்டுள்ளனர்.
அவர் வரவில்லை என்று குடும்பத்தினர் கூறவே, அதற்கு அவர்கள், அப்படியானால் அவர் இறந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சவூதியில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டனர். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ ஆகியோருக்கு மாணிக்கவாசகத்தின் குடும்பத்தினர் அவசர தந்திகளை அனுப்பியுள்ளனர்.
மாணிக்கவாசகம் என்ன ஆனார் என்பது தெரியாமல் அவரது மனைவியும், குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.