ஊரை அடித்து உலையில் போடுபவர் கருணாநிதி: இராமகோபாலன் கடும் தாக்கு
சென்னை:ஊரை அடித்து உலையில் போடுவது என்ற பழமொழி முதல்வர் கருணாநிதிக்கு மிக பொருத்தமாக இருக்கும் என இந்து முன்னணி அமைப்பாளர் இராம கோபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தனக்கு உமறுப் புலவர் விருது வழங்கப்பட்ட மகிழ்ச்சியில் தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவசர சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுபோன்று மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் பாகிஸ்தான் பிரித்து கொடுக்க வேண்டும் என கலவரம் நடத்தி பாகிஸ்தானை பெற்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டால் கூட அது தேசவிரோத செயலாகும். இந்த சலுகை மதமாற்றம் அதிகரிக்க காரணமாக அமைந்துவிடும். இது மதமாற்றத்தை ஊக்குவிக்கும். அந்த மதத்திற்கு போனால் அந்த மதச் சலுகைகளுடன், அரசின் சலுகைகளும் கிடைக்கிறது என்பதால் மதமாற்றம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்.
ஊரை அடித்து உலையில் போடுவது என்ற பழமொழி தமிழக முதல்வருக்கு பொருத்தமானது. இது சிறுபான்மையினரின் வாக்குகளை வளைத்துப் போட செய்யப்படும் தந்திரம்.
இந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீட்டில், மற்ற மதங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என்று புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் கருத்து பாராட்டப்பட வேண்டியது.
இந்த இட ஒதுக்கீடு சட்டரீதியாக செல்லாது என நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் முதல்வர் கருணாநிதி இப்படி தந்திரமாக கூறி முஸ்லீம்களையும், இந்துக்களையும் ஏமாற்றுகிறார்.
அனைத்துக் கட்சியிலும் உள்ள முஸ்லீம்களும், முஸ்லீம் இட ஒதுக்கீட்டிற்காக பாடுபடும் நிலையில் அனைத்துக் கட்சியிலும் உள்ள இந்துக்களும் உரிமையை காப்பாற்ற விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் போராட வேண்டும். அதற்கு இந்து முன்னணி துணை நிற்கும் என உறுதியளிக்கிறோம் என கூறியுள்ளார்.