பாலஸ்தீனம்-பிபிசி செய்தியாளர் ஆலன் விடுதலை
காஸா:4 மாதங்களுக்கு முன் பாலஸ்தீனத்தில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பிபிசி செய்தியாளர் ஆலன் ஜான்ஸ்டன் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த மார்ச் 12ம் தேதி இஸ்லாம் ராணுவம் என்ற தீவிரவாத அமைப்பு காஸா பகுதியில் வைத்து ஆலனை கடத்திச் சென்றது. பிரிட்டனில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்காவிட்டால் ஆலனை கொலை செய்வோம் என அந்த அமைப்பு எச்சரித்தது.
இது தொடர்பாக 3 வீடியோக்களையும் வெளியிட்டது. அதில் வீடியோக்களில் ஆலனை பேச வைத்திருந்தது.
இந் நிலையில் ஆலனை விடுவிக்க பாலஸ்தீனத்தை ஆளும் ஹமாஸ் அரசு தீவிர முயற்சிகள் எடுத்தது. இஸ்லாம் ராணுவம் அமைப்புடன் பேச்சு நடத்தி ஆலனை ஹமாஸ் மீட்டுள்ளது. இன்று அதிகாலை ஆலன் விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை சந்தித்து ஆலன் நன்றி தெரிவித்துக் கொண்டார். ஆலனை விடுவிக்கக் கோரி உலகெங்கும் பத்திரிக்கையாளர்களும் பிற அமைப்புகளும் தொடர் பேராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் வரை காஸா பகுதி யாசர் அராபத் உருவாக்கிய பதா அமைப்பின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அப்போது தான் ஆலன் கடத்தப்பட்டார். ஆனால், பதா-ஹமாஸ் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் காஸா பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டில் வந்தது.
இதனால் பாலஸ்தீன பிரதமராக இருந்த ஹமாஸ் தலைவரான இஸ்மாயில் ஹனியேவை பதவியை விட்டு நீக்கினார் பாலஸ்தீன அதிபரும் பதா தலைவருமான மஹ்மூத் அப்பாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.