தீவிரவாத தாக்குதல்-லண்டனில் 108 விமானங்கள்ரத்து: மேலும் ஒரு இந்திய டாக்டரும் கைது
லண்டன்:லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான பை கிடந்ததையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் செல்லும் 108 விமானங்களை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்துள்ளது.
லண்டனில் சமீபத்தில் குண்டுகள் நிரப்பப்பட்டு வெடிக்கத் தயார் நிலையில் இருந்த இரு கார்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர விமான நிலையத்தின் மீது கார் தாக்குதல் நடந்தது.
இச் சம்பவம் தொடர்பாக 8 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் டாக்டர்கள். இதில் இரு இந்திய இஸ்லாமிய டாக்டர்களும் அடங்குவார்.ஒருவர் இங்கிலாந்திலும் இன்னொருவர் ஆஸ்திரேலியாவிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவாலில் கைதானவர் பெயர் முகம்மது ஹனீப். 27 வயதான இவர் டாக்டரை பிரிட்டன் கேட்டுக் கொண்டதன்பேரில் ஆஸ்திரேலிய போலீசார் பிரிஸ்பேன் நகரில் வைத்து கைது செய்தனர்.
ஹனீப் கர்நாடக மாநிலம் குனிகலை சேர்ந்தவர். இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில் சில காலம் இருந்துள்ளார். அதன் பின்னரே ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளார்.
பெங்களூரில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவ பல்கலைக்கழகத்தில்தான் 2002ம் ஆண்டு இவர் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்.
அதே போல இன்னொரு இந்திய வம்சாவளி டாக்டரும் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். செல்சையர் நகரில் உள்ள ஹால்டன் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இவரும் முஸ்லீம் தான்.
மேலும் ஒரு டாக்டரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று ஹீத்ரோ விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு பை கிடந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் பரபரப்பும் பீதியும் தொற்றிக் கொண்டது.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் 108 விமானங்களை பிரிட்டஷ் ஏர்வேஸ் ரத்து செய்துவிட்டது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இங்கிலாந்தில் பல இடங்களிலும் தொடர்ந்து ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜோர்டன், செளதி அரேபியா, இராக்கைச் சேர்ந்த பலர் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளாஸ்கோ விமான நிலையம் மீது கார் தாக்குதல் நடத்திய பாக்தாத்தைச் சேர்ந்த பிலால் தலால் என்பரும் கைது செய்யப்பட்டுள்ளார். இத் தாக்குதலில் இவர் கடும் தீக்காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இவருடன் காரில் இருந்தவரும் இராக்கியரே. அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.