9ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்
சென்னை:எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வருகிற 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறுகையில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கூட்டம் வருகிற 9ம் தேதி தொடங்குகிறது. 16ம் தேதி வரை நடைபெறும்.
தமிழகத்தில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகளுக்கு அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி கிடைத்தவுடன் இங்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் வரை கட்டணமாக நிர்ணயித்துள்ளன. இது சரியான தொகையா என்பதை ஆய்வு செய்ய ராமன் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷன் தனது அறிக்கையைக் கொடுத்தவுடன், கட்டணக் குறைப்பு அதிக அளவுக்குப் பரிந்துரைக்கப்பட்டால் அதைப் பின்பற்றுவோம்.
கட்டணக் குறைப்பு அதிக அளவில் இல்லையென்றால் மேல் முறையீடு செய்வோம். மீனாட்சி மருத்துவக் கல்லூரி, செட்டிநாடு மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக வழக்கு நடந்து வருகிறது.
மருத்துவக் கல்லூரிகளில் படித்து விட்டு வெளியே வரும் மாணவர்கள் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் ராமச்சந்திரன்.