10 நாட்களில் 7 பேர் தலை துண்டிப்பு:- தலிபான் தீவிரவாதிகள் அட்டகாசம்
காபூல்:
தலிபான் தீவிரவாதிகள், தங்களைப் பற்றி ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளுக்கு உளவு சொன்னதற்காக கடந்த பத்து நாட்களில் 7 அப்பாவிகளின் தலைகளைத் துண்டித்துக் கொன்றுள்ளனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நாட்டோ மற்றும் அமெரிக்கப் படையினருக்கு உளவு சொல்வோர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் தலிபான் அமைப்பினர்.
ஈராக்கில் உள்ள தீவிரவாதிகள் செய்வது போல தற்கொலைப் படைத் தாக்குதல், சாலையோரங்களில் குண்டு வைத்தல் போன்றவற்றை அவர்களும் நிகழ்த்தி வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்த அவர்கள் முனைகிறார்கள்.
கடந்த பத்து நாட்களில், அரசுப் படைகளுக்கும், நேட்டோ மற்றும் அமெரிக்கப் படையினருக்கும் உளவு சொன்னதற்காக 10 அப்பாவி ஆப்கானிஸ்தானியர்களின் தலைகளைத் துண்டித்து கொன்றுள்ளனர்.
காந்தஹார், காஸ்னி மற்றும் தெற்கு ஆப்கானிஸ்தானில் இது நடந்துள்ளது. தங்களை ஆதரிக்க வேண்டும் என்று மக்களை தலிபான் நிர்ப்பந்திக்கிறது. தங்களை மீறி அல்லது தங்களுக்கு எதிராக செயல்படுவோரைப் பிடித்து அவர்கள் முதலில் சித்திரவதை செய்கிறார்கள், பின்னர் கொன்று விடுகிறார்கள் என்றார் அவர்.
ஆனால் தங்களது செயலில் எந்தத் தவறும் இல்லை என்று தலிபான் தீவிரவாதிகளின் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களுக்கு எதிராக எதிரிப் படையினருக்கு தகவல் சொல்வோரை உரிய ஆதாரங்களுடன்தான் நாங்கள் பிடிக்கிறோம்.
எங்களது மண்ணில் அத்துமீறி நுழைந்து, எங்களது மக்களை கொன்று குவிக்கும் அந்நியப் படையினருக்கு ஆதரவு தருவோரை நாங்கள் எப்படி சும்மா விட முடியும்.
இதுபோல பல உளவாளிகளைப் பிடித்து, அவர்களை தலை துண்டித்துக் கொன்றுள்ளோம். இதில் எந்தத் தவறும் இல்லை என்றார் அவர்.
2001ம் ஆண்டு தலிபான் ஆட்சி, ஆப்கானிஸ்தானிலிருந்து அகற்றப்பட்டது. அதன் பின்னர் அங்கு அமெரிக்கா தலைமையிலான படைகள் நுழைந்தன. இதையடுத்து அங்கு தேர்தல் நடந்து கர்ஸாய் தலைமையிலான ஆட்சி பதவிக்கு வந்தது.
இந்த நிலையில் கடந்த 18 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இந்த காலகட்டத்தில் மட்டும் 1500 அப்பாவி பொதுமக்கள் உள்பட 6000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.