சத்துணவில் வாரம் 3 முட்டை திட்டம்:தொடங்கி வைத்தார் கருணாநிதி
சென்னை:
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.
பெருந்தலைவர் காமராஜரின் 105வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்லவன் நிலையம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, பூங்கோதை, மதிவாணன், கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள், பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், பாஜக சார்பில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் மாலை அணிவித்தனர்.
காமராஜர் பிறந்த நாள் கல்வி எழுச்சி நாளாக கொண்டாடப்படும் என்று முன்கூட்டியே தமிழக அரசு அறிவித்திருந்ததால் இன்று பள்ளிகள் அனைத்தும் திறந்திருந்தன. கல்வி எழுச்சி நாள் விழா இன்று பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.
இன்றைய நாளில் வாரம் 3 முறை சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
இதையொட்டி சேப்பாக்கம் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி, குழந்தைகளுக்கு முட்டை மற்றும் சர்க்கரைப் பொங்கலை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.