புனிதப் போர் மூலம் இறப்பேன்:பின் லேடன் வீடியோவால் பரபரப்பு!
பாக்தாத்: புனிதப் போர் மூலம் நான் உயிர்த் தியாகம் செய்வேன். அப்படி தியாகம் செய்பவர்களைத்தான் நபிகள் விரும்புகிறார் என்று ஓசாமா பின் லேடன் பேசிய பேச்சு அடங்கிய வீடியோ கேசட் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா வலை வீசி தேடி வரும் அல் கொய்தா தலைவர் பின் லேடன் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் ஆப்கான் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக ஒரு கருத்தும், இறந்து விட்டதாக இன்னொரு தகவலும் உள்ளன.
அவர் உயிருடன் இல்லை என்பதற்கு ஆதாரமாக சமீப காலமாக பின் லேடனின் வீடியோ காட்சி எதுவும் வெளியாகாததை, அவர் இறந்து விட்டார் என்று கூறுபவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.
பின் லேடன் இறந்து விட்டார் என்று கூறப்படும் வாதம் வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்க செனட் சபையில் சமீபத்தில் லேடனின் தலைக்கு வைத்த விலையை ரூ. 200 கோடியாக அதிகரித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், பின்லேடன் அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு மத்தியில லேடன் பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 40 நிமிடங்கள் ஓடும் அந்த கேசட்டில் பின்லேடன் 1 நிமிடம் மட்டுமே பேசியுள்ளார்.
அதில், கொள்கை மற்றும் மதத்துக்காக உயிர் தியாகம் செய்யும் இளைஞர்களையும், மக்களையும் தான் நபிகள் நாயகம் விரும்புகிறார். இதுவரை உயிர்ப்பலி செய்தவர்களுக்கு என்னுடைய நன்றிகள். இந்த உயிர் தியாகத்தில் ஈடுபட பலர் முன்வர வேண்டும்.
மற்றவர்களைப் போலவே நானும் புனிதப் போரில் ஈடுபட்டு உயிரத் தியாகம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் லேடன்.
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்று மட்டும் தெளிவாகிறது. காரணம், லேடனின் பேச்சு பொதுவாகத்தான் உள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் எதுவும் அவரது பேச்சில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த புதிய வீடியோவால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளதை மறுக்க முடியாது.