மத்திய அரசு உதவ ஹனீப் மனைவி கோரிக்கை
பெங்களூர்:ஆஸ்திரேலிய அரசின் போக்கினால் பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ள டாக்டர் முகம்மது ஹனீப்பின் மனைவி பிர்தோஸ், தனது கணவரை பத்திரமாக மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இங்கிலாந்து தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப் மீதான புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்பதால் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென சிம் கார்டு கொடுத்து தீவிரவாதிகளுக்கு உதவியதாக கூறி வழக்குப் பதிவு செய்தனர் ஆஸ்திரேலிய போலீஸார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து அவர் விடுதலையாகி வெளியே வரும் சூழல் உருவானது.
ஆனால் இன்று யாரும் எதிர்பாராத அளவு, ஹனீப்பின் விசாவை ரத்து செய்து அதிர்ச்சி அளித்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. அவரை குடியேற்றத் துறை காவல் மையத்தில் சிறை வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
இதனால் ஹனீப்பின் மனைவி மற்றும் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஹனீப்பின் மனைவி பிர்தோஸ், ஆஸ்திரேலிய அரசின் முடிவு முற்றிலும் நியாயமற்றது. ஒரு முஸ்லீம் என்பதால் எனது கணவரை ஆஸ்திரேலிய அரசும், காவல்துறையும் துன்புறுத்துகிறது.
எனது கணவர் அப்பாவி. அதை இந்த உலகம் அறியும். ஒரு அப்பாவி இந்தியக் குடிமகன் ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு அரசு மற்றும் காவல்துறையால் துன்புறுத்தப்படும் பொழுது அதை மத்திய வெளியுறவுத்துறையும், மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை இந்த விஷயத்தில் தலையிட்டு எனது கணவரை விடுவிக்க உதவ வேண்டும்.
எனது கணவர் மீண்டும் கைது செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். எப்படியாவது அவரை சிறையில் வைத்திருக்க வேண்டும், விடக் கூடாது என்று ஆஸ்திரேலிய அரசு நினைக்கிறது. அதனால்தான் இத்தனை நாட்களாக விசாவை ரத்து செய்யாமல் விட்டு விட்டு இப்போது திடீரென அந்த முடிவை ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ளது.
எனது சகோதரர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளார். விசா கிடைத்தவுடன் அவர் அங்கு சென்று எனது கணவரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் என்றார் பிர்தோஸ்.
ஹனீப்புக்கு ஜாமீன் கிடைத்தபோது அவரது குடும்பம் பெரும் நிம்மதி அடைந்தது. இதுகுறித்து பிர்தோஸ் நேற்று கூறுகையில், எனது கணவருக்காக பிரார்த்தனை செய்த அத்தனை பேருக்கும் நன்றி. பிரதமருக்கும் நாங்கள் நன்றிகளைக் கூறிக் கொள்கிறோம். சிம் கார்டு கொடுப்பது என்பது தீவிரவாதச் செயல் அல்ல என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று ஹனீப் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதால் ஹனீப்பின் குடும்பம் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
இதற்கிடையே, பெங்களூரில் உள்ள கபீல் அகமது, சபீல் அகமது சகோதரர்களின் வீட்டில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க், தடயவியல் சோதனைக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் அச்சுதராவ் கூறுகையில், ஹார்ட் டிஸ்க்கை சோதனை செய்வதற்காக ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை இங்கிலாந்து போலீஸாரோ அல்லது ஆஸ்திரேலிய போலீஸாரோ பெங்களூர் காவல்துறையை தொடர்பு கொள்ளவில்லை என்றார் ராவ்.