மதுரை-சென்னை விமானத்தில் சக்கர கோளாறு
சென்னை:மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.
நேற்று மாலை சென்னையிலிருந்து மதுரைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்றது. அந்த விமானம் இரவு 8.50க்கு மதுரையிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டது. அதில் 40 பயணிகள் இருந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இரவு 10 மணியளவில் அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது விமானத்தின் முன் சக்கரங்கள் வெளியே வரவில்லை. சக்கரங்கள் வெளியே வர உதவும் ஹைடிராலிக் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு தான் இதற்கு காரணம்.
இதையடுத்து பைலட், விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். இதையடுத்து விமான நிலையம் அவசரகால நிலைக்கு கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வண்டிகளும் ஆம்புலன்ஸ்களும் ரன் வேயை ஒட்டி நிறுத்தப்பட்டன.
இந் நிலையில் ஒரு வழியாக சக்கரங்கள் வெளியே வந்தன. இதனால் அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. அதில் பயணம் செய்த 40 பயணிகளும் உயிர் தப்பினார்.