முகம்மது ஹனீப் ஜாமீனில் விடுதலை
பிரிஸ்பேன்:
இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப்புக்கு பிரிஸ்பேன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஜூன் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இங்கிலாந்தில் நடந்த தீவிரவாத செயல்கள் தொடர்பாக ஜூலை 2ம் தேதி பெங்களூரைச் சேர்ந்த, டாக்டர் முகம்மது ஹனீப், பிரிஸ்பேனில் கைது செய்யப்பட்டார்.
12 நாள் போலீஸ் காவலில் இருந்த அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. இதையடுத்து அவர் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஹனீப்.
இந்த நிலையில் ஹனீப் சார்பில் ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் பீட்டர் ருஸ்ஸோ பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ஹனீப்புக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
வழக்கு முடியும் வரை தினசரி நீதிமன்றத்தில் ஹனீப் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் ஹனீப்புக்கு நிபந்தனை விதித்துள்ளது.
இதற்கிடையே தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட ஹனீப்பின் உறவினரான டாக்டர் சபீல் அகமது இன்று அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.