காஷ்மீரை யாராலும் பிரிக்க முடியாது-மன்மோகன்சிங்
காஷ்மீர்: இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்க யாராலும் முடியாது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஜம்மு பல்கலைகழகம் சார்பில் பிரதமருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதைப் பெற்றுக் கொண்டு பிரதமர் பேசியதாவது.
சுமார் 60 ஆண்டு கால பிரச்சனையில் தற்போது தான் தீர்வு காணக்கூடிய வகையில் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் இரு நாடுகளின் நட்புறவில் ஒரு அத்தியாயம் நிகழப் போகிறது.
காஷ்மீர் மாநிலம் இரு நாடுகளுக்கிடையே முக்கிய அடையாளச் சின்னமாக இருக்கும் என நம்புகிறேன். நான் ஏற்கனவே பலமுறை சொல்லியபடி, எல்லைக் கோட்டை மாற்ற முடியாது. அது தேவையற்ற செயலாகும்.
இதன்மூலம் பிரித்து தருவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை சமாதான கோடாக மாற்ற முடியும். இப்போது நடைபெறும் வன்முறைகளை தடுப்பதன் மூலமும், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதன் மூலமும்தான் இந்த சமாதானக் கோடு சாத்தியமாகும்.
அமைதியை விரும்பும் மாநிலத்தில் தீவிரவாத அச்சுறுத்தலை அடியோடு அழிக்க உறுதியாக இருக்கிறோம். இதில் எத்தனை தடங்கல்கள் வந்தாலும் எங்கள் தரப்பிலிருந்து தாக்குதல் தொடரும் எனவும் எச்சரிக்கிறேன் என்றார் மன்மோகன் சிங்.