புகையில்லா உலகம் வேண்டும்-ராமதாஸ்
சென்னை:தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை மூடச் சொல்லி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னையை அடுத்த மறைமலைநகரில் பாமகவின் சீருடை அணிவகுப்பு மாநாடு நடந்தது. முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கிய இந்த மாநாட்டில் ராமதாஸ் பேசியதாவது
லாட்டரி ஒவ்வொரு குடும்பத்தையும் எப்படி சீரழித்ததோ, அதே போல் தான் கஞ்சா. குறிப்பாக மாணவர்கள் எப்படி அதை அதிகளவு பயன்படுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இங்கு வந்துள்ள அனைவருக்கும் வேலை கொடுக்கிறேன். அந்த வேலை தமிழகத்தை அழித்துக் கொண்டிருக்கும், அதிலும் குறிப்பாக இளைஞர் சமுதாயத்தை வளர விடாமல் கெடுக்கும் தீய சக்திகளை ஒழிக்கும் போராட்டம் தான்.
பீடியை குடிசைத் தொழில் என சொல்லிக் கொண்டு அதிகம் பேரின் வாழ்வை அழித்துவிட்டு, பீடி கம்பெனி முதலாளிகள் பணத்தில் திளைக்கிறார்கள்.
பீடி சுற்றுபவர்களுக்கு குடிசைத் தொழில் அது மட்டும் தானா. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசைத் தொழில்கள் உள்ளன. அதன் மூலம் மாற்று தொழிலை கொடுப்பதன் மூலம் பீடித் தொழிலை அழிக்க வேண்டும். புகையில்லாத உலகமாக மாற வேண்டும். முதலில் புகையிலை இல்லா தமிழ்நாடாக மாற்ற வேண்டும்.
இது 600 கோடி மக்களை பற்றிய கனவு. இதற்காக இந்தியாவில் கவலைப்படுபவர் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே. இதற்காகதான் அமெரிக்காவில் 10,000 பேர் சேர்ந்து விருது கொடுத்தார்கள்.
வரும் 20ம் தேதி உலக சுகாதார அமைப்பு, புகையில்லாத இந்தியாவாக மாற்ற பாடுபடும் அன்புமணிக்கு விருது கொடுக்க போகிறது. இதனால் நமது தமிழ்நாட்டுக்கும், பாட்டாளி இளைஞர் சங்கத்துக்கும் பெருமை.
மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு கேடு என்கிறார்கள். ஆனால் அதை ஊக்குவிக்கும் வகையில் தெருவிற்கு தெரு மதுக்கடைகள் இருக்கின்றன. அதை மூடச்சொல்லி அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் மனு கொடுங்கள் என்றார்.