27 சதவீத இடஒதுக்கீடு: தடையை நீக்கக் கோரிஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
டெல்லி:உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மீதான இடைக்காலத் தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுமனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டு இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் கிரீமிலேயர் பிரிவினருக்கும் இடஒதுக்கீடு சலுகை அளிக்க வகை செய்யப்பட்டது.
இந் நிலையில் இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசிடம் சில விளக்கங்களை உச்சநீதிமன்றம் கேட்டது. மேலும் இந்த ஆண்டு இட ஒதுக்கீட்டை அமலாக்க இடைக்காலத் தடையும் விதித்தது.
இந் நிலையில் இன்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் முன்னிலையில் இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.