சரத்குமாரின் சமத்துவ-சமதர்ம கட்சி!
சென்னை:அக்டோபர் மாதம் சமத்துவ, சமதர்மக் கட்சி தொடங்கப்படும். 2011ம் ஆண்டு காமராஜர் ஆட்சி தமிழகத்தில் மலரும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் காமராஜர் பிறந்த நாள், சரத்குமார் பிறந்த நாள் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்டு சரத்குமார் பேசுகையில், சமத்துவ, சமதர்மக் கட்சி அக்டோபர் மாதம் தொடங்கப்படும். இந்தக் கட்சிக்கென தனிக் கொடி உருவாக்கப்படும். ஆகஸ்ட் 15ம் தேதி கொடி வெளியிடப்படும். அதன் பின்னர் மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவர். கட்சியின் கொள்கைகளும் விரிவாக அறிவிக்கப்படும்.
2011ம் ஆண்டு தமிழகத்தில் கட்டாயம் காமராஜர் ஆட்சி அமையும். எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும்.
இப்போது தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் தொடங்கி விட்டது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். மக்களின் கருத்தைக் கேட்கவுள்ளேன் என்றார் சரத்குமார்.
இக்கூட்டத்தில் யாதவ மகாசபைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், பல்வேறு நாடார் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.