ஒற்றை ஜடையில் வந்ததால் ஆத்திரம்:மாணவி முடியை வெட்டிய ஆசிரியை
சென்னை:சென்னை அருகே இரட்டை ஜடை போடாமல் ஒற்றை ஜடையில் வந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை, மாணவியின் முடியை வெட்டித் தள்ளினார்.
சென்னை அருகே உள்ள மறைமலைநகரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுலட்சனா என்ற மாணவி படித்து வருகிறார்.
பள்ளியில் மாணவிகள் ஒற்றை ஜடை போடக் கூடாது என்று உத்தரவு உள்ளதாம். ஆனால் சுலட்சணா மறந்து ஒற்றை ஜடையில் பள்ளிக்கு வந்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது வகுப்பு ஆசிரியை ஷகீலா, சுலட்சணாவின் ஜடையை கத்திரிக்கோலால் கரகரவென அறுத்து கையில் கொடுத்து இனிமேல் ஒற்றை ஜடையில் வந்தால் இதுதான் கதி என்றும் எச்சரித்துள்ளார்.
அவமானமடைந்த மாணவி சுலட்சணா, அழுதபடி வெட்டிய முடியுடன் வீடு திரும்பினார். பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள், உறவினர்களைச் சேர்த்துக் கொண்டு பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியை பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் வேலைக்கு நியமிக்கப்பட்டவராம். எனவே தங்களால் அவரை வேலையிலிருந்து நீக்க முடியாது, நடவடிக்கை எடுக்க முடியாது என்று தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவர் இன்று பள்ளிக்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினார்.