அதிமுக பாணியில் தெலுங்குதேசம்மாற்றி ஓட்டுப் போட்ட பாஜக!
காந்திநகர்:3வது அணியின் குடியரசுத் தலைவர் தேர்தல் புறக்கணிப்பு முடிவை புறம் தள்ளி விட்டு, திடீரென அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தது போல தெலுங்குதேசம் மற்றும் குஜராத் பாஜகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் நேற்று திடீரென வாக்களித்தனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என்று 3வது அணி முடிவு செய்து அதை அறிவிக்கவும் செய்தது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் இந்த அறிவிப்பையும் டெல்லியில் வெளியிட்டார்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், நேற்று நடந்த வாக்குப் பதிவின்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்து ஓட்டுப் போட்டு 3வது அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.
இதுகுறித்து ஜெயலலிதா அளித்த விளக்க அறிக்கையில், நான் காலையிலேயே வெளியில் போய் விட்டேன். மதியத்திற்கு மேல்தான் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். அப்போதுதான் அதிமுகவினர் வாக்களித்து விட்டதாக தெரிய வந்தது.
எல்லாம் தேர்தல் ஆணையத்தால் ஏற்பட்ட குழப்பம். அதனால்தான் எனக்குக் கூடத் தெரியாமல் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓட்டுப் போட்டு விட்டனர் என்று அறிக்கையில் கூறியிருந்தார் ஜெயலலிதா.
இதற்கிடையே, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களும் நேற்று கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வாக்களித்தனர். அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தெரியவில்லை.
மேலும் குஜராத் மாநில பாஜகவிலும் நேற்று வெடிப்பு ஏற்பட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்த 15 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங். கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
நரேந்திர மோடி மீது கொண்ட அதிருப்தியால் அவர்கள் ஆள் மாற்றி வாக்களித்ததாக பின்னர் தெரிவித்தனர். இவர்களில் ரமீலாபென் தேசாய் என்ற பெண் எம்.எல்.ஏ. கட்சி விரோத நடவடிக்கை காரணமாக கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.