செட்டிநாடு மருத்துவ கல்லூரிக்குஇட ஒதுக்கீடு செல்லாது - உச்சநீதிமன்றம்
டெல்லி:செட்டிநாடு மருத்துவ கல்லூரியில் மட்டும் தமிழக அரசின் 65 சதவீத இட ஒதுக்கீடு உத்தரவு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சுய நிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து சுயநிதி கல்லூரி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு மற்றும் செட்டி நாடு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவு இந்த ஆண்டு மட்டும் செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து செட்டிநாடு மருத்துவக் கல்லூரி, சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், அனைத்து இடங்களையும் நாங்களே நிரப்பிக் ெகாள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நவலேகர், அகர்வால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், செட்டிநாடு மருத்துவ கல்லூரியில் அரசின் இட ஒதுக்கீடான 65 சதவீதத்தை அமல் படுத்த தேவையில்லை. மேலும் செட்டிநாடு கல்லூரி புதிதாக ஆரம்பிக்கப்பட்டது என்பதால் அனைத்து இடங்களையும் அவர்களே நிரப்பி கொள்ளலாம் என தீர்ப்பளித்தனர்.
மேலும் மற்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உச்சநீதிமன்றத்தை அணுகினால் அதற்கேற்றவாறு உரிய உத்தரவு வழங்கப்படும் என்றும் அறிவித்தனர்.