ஜெ. ஸ்டண்ட் - சந்திரபாபு நாயுடு அப்செட்
ஹைதராபாத்:குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததால் 3வது அணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது கட்சியினரிடம் ஜெயலலிதா குறித்து கடும் அதிருப்தியுடன் பேசியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதாக 3வது அணி எடுத்த முடிவுக்கு மாறாக, நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் 3வது அணி கலகலத்துப் போயுள்ளது. அதிமுகவின் இந்த செயல் குறித்து நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, இதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. இதனால் 3வது அணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது, தலைவர்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடு ஏற்படாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜெயலலிதா மீது சந்திரபாபு நாயுடு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக ஆங்கிலப் பத்திரிக்கைக்கு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்து விட்டனர் என்ற செய்தி சட்டசபையில் இருந்த நாயுடுவுக்கு பகலில் தெரியவந்ததும் கடும் அப்செட் ஆகிவிட்டாராம்.
அதிமுகவினர் வாக்களித்து வரும் செய்தி பரவியதும், ஆந்திர சட்டசபை வளாகத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் அறையில் தெலுங்கு தேச எம்.எல்.ஏக்கள் குழுமினர்.
அவர்களிடம் சந்திரபாபு நாயுடு பேசுகையில், அரசியலில் நம்பகத்தன்மை முக்கியம். செய்வது ஒன்றும், சொல்வது ஒன்றுமாக இருந்தால் அந்த நம்பகத்தன்மை கெட்டு விடும். ஏன் ஜெயலலிதா இப்படிச் ெசய்தார் என்று புரியவில்லை.
டெல்லியில் அனைவரும் எடுத்த முடிவு இது.
அவரது செயல்படும் ஸ்டைல் அனைவருக்கும் தெரிந்ததுதான். முழுமையாக தன்னிச்சையாக நடந்து ெகாண்டு விட்டார் ஜெயலலிதா. தேர்தலைப் புறக்கணிப்பது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். ஆனால் இப்ேபாது இப்படிச் ெசய்து விட்டார். அவரை இனிமேல் நம்ப முடியாது என்றாராம் நாயுடு.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியைச் ேசர்ந்த இரு எம்.எல்.ஏக்கள் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பதும் நினைவிருக்கலாம்.