3வது அணியின் ரஷீத் மசூத் மனு தாக்கல்ஜெ, வைகோ வராதது ஏன்?
டெல்லி:துணை ஜனாதிபதி பதவிக்குப் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரஷீத் மசூத் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஆனால், இந் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக மலைச்சாமி எம்பி தான் வந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்ற 3வது அணி, முதன் முதலாக தங்கள் அணியில் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை பிரகடனம் செய்தது. சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவரும் மக்களவை உறுப்பினருமான ரஷீத் மசூத் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால், தனது அணியின் அறிவிப்பை தானே மீறி பாஜக வேட்பாளர் ஷெகாவத்துக்கு வாக்களித்தார் ஜெயலலிதா. அவரை அப்படியே பாலே செய்தார் வைகோ.
இதனால் மூன்றாவது அணி என்ற ஒன்று இன்னும் இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷீத் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அப்போது மூன்றாவது அணியின் தலைவர்கள் அனைவரும் உடனிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், இந்திய தேசிய லோக் தள் தலைவர் ஓம்பிரகாஷ் செளதாலா, ஜார்க்கண்ட் விகாஸ் கட்சியின் தலைவர் பாபுலால் மராண்டி ஆகியோர் தான் உடனிருந்தனர்.
ஜெயலிலிதாவும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் வரவில்லை. ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக அதிமுக எம்பி மலைச்சாமியும் மதிமுக எம்பி சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும் தான் வந்தனர்.
(நேற்று ஷெகாவத்துக்கு வாக்களித்த நிலையில் ஜெயலலிதாவும் வைகோவும் இதற்காக டெல்லி போவார்களா என்பது சந்தேகமே என்று நாம் காலையிலேயே தெரிவித்திருந்தோம்).
வேட்பு மனு தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங்,ஷெகாவத்துக்கு வாக்களித்த விஷயத்தில் ஜெயலலிதாவைக் குறை கூற யாருக்கும் அதிகாரம் இல்லை என்றார்.
நாயுடு கூறுகையில், தேர்தல் கமிஷனின் உத்தரவால் குழப்பம் ஏற்பட்டதால் தான் கிராஸ் வோட்டிங் நடந்தது. மற்றபடி எங்களுக்குள் பிளவு ஏதும் இல்லை என்றார் (இதே தேர்தல் கமிஷன் காரணத்தைத் தான் ஜெயலலிதாவும் கூறியிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது)