திருப்பதியில் ஆண், பெண்களுக்கு தனி க்யூ
பள்ளிப்பட்டு
திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆண்கள் மற்றும் பெண்கள் இனிமேல் தனித்தனியாக தான் வரிசையில் செல்ல வேண்டும்.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சன்னிதானத்தல் தரிசனத்திற்கு வரும்போது அங்கு நிற்கும் பாதுகாவலர்கள் முரட்டுத்தனமாக அனைவரையும் பிடித்து தள்ளிவிடுவார்கள். இது சம்பந்தமாக ஏகப்பட்ட புகார்கள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வந்தன.
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து பக்தர்களுக்கு இடையூறு இல்லாதவாறு ஏற்பாடுகளை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி சன்னிதானத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக வரிசை அமைக்க முடிவுசெய்தது.
பக்தர்கள் கோவிலின் தங்கவாயில் வரை அனைவரும் ஒன்றாகத்தான் செல்ல வேண்டும். தங்கவாசலுக்கு பிறகு ஆண்கள், பெண்கள் என தனிவரிசை பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சிரமமின்றி அனைவரும் செல்ல வாய்ப்புள்ளது. நெரிசலில் பெண்களையும், குழந்தைகளையும் சிக்கமாட்டார்கள்.
இதனை சோதனை செய்யும் வகையில் நேற்று தேவஸ்தானம் இந்தமுறையை செயல்படுத்தியது. இதில் சிரமமின்றி அனைவரும் ஏழுமலையானை வணங்கினர். இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால் குடும்பத்துடன் சாமி கும்பிட வந்த ஆண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் குழந்தைகளை தவறவிடும் வாய்ப்புள்ளது என்றனர். பல மைல்கள் கடந்து ஏழுமலையானை குடும்பத்தோடு தான் தரிசிக்க வருகிறோம். இங்கு வந்தால் தனியாக பிரிப்பது முறையல்ல என தெரிவித்தனர்.
ஆண்களும், குடும்பத்தோடு வருபவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த தனிவரிசையை தேவஸ்தான அதிகாரிகள் அமல்படுத்துவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.