மாணவியுடன் குடும்பம் நடத்திய ஆசிரியர் கைது!
நாகர்கோவில்மனைவி, குழந்தைகளை நட்டாற்றில் விட்டு விட்டு, கல்லூரி மாணவியுடன் குடும்பம் நடத்தி வந்த உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் வஞ்சி ஆதித்தன் புதுத்தெருவைச் சேர்ந்தவர் அழகுராஜ். வடசேரியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் உடற் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு ரமணி என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அழகுராஜ் வேலை பார்த்து வரும் பள்ளியில் பானு என்கிற மாணவி அவர் வேலை பார்த்து வந்துள்ள பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்து வந்துள்ளார்.
ஆனால் பானு இப்போது கல்லூரியில் படித்து வருகிறாராம். விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தால் அழகுராஜாவை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். ஆனால் அவரது அழகில் மயங்கிய அழகுராஜ், பானு மீது காதல் கொண்டார்.
இவர்களின் கள்ளக்காதல் அழகுராஜாவின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது.கள்ளக் காதலை பானுவும் ஏற்றுக் கொண்டார். அழகுராஜை விட மனமில்லாத பானு, அழகுராஜின் மகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பதாக கூறி வீட்டுக்கு வர ஆரம்பித்தார்.
டியூஷன் ஒரு பக்கம் நடக்க, அழகுராஜ்-பானுவின் கள்ளக்காதலும் மறுபக்கம் ஆழமாகிக் கொண்டு சென்றது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் வேகம் பிடிக்க வீட்டை விட்டு வெளியேறி விட்னர். கீழ புத்தேரி என்ற இடத்தில் வீடு எடுத்து பானுவுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தார் அழகுராஜ்.
இது ரமணிக்குத் தெரிய வர நேராக கணவரிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். ஆனால் உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி ரமணியை அழகுராஜ் மிரட்டியுள்ளார். இதையடுத்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் ரமணி.
போலீஸார் விசாரணை நடத்தியபோது பானுவை, அழகுராஜ் பதிவுத் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இந்தத் திருமணத்திற்கு பானுவின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதையடுத்து அழகுராஜ், பானு, தாயார் பகவதி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் பானுவின் சகோதரர் ராஜ்குமார், சித்தியின் மகன் மதுசூதனன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.