ஹாரி பாட்டர்-7 சூப்பர் ஹிட்; விற்பனை படு ஹாட்!
நியூயார்க்:உலகெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி பாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் புத்தகம் வெளியாகி விட்டது. ரிலீஸ் ஆன அத்தனை நாடுகளிலும் புத்தம் படு வேகமாக விற்பனையாகி வருகிறது.
பெண் எழுத்தாளர் ஜே.கே.ரெளலிங்கின் எழுத்தில் உருவான ஹாரி பாட்டர் குறித்த நூல்கள் இதுவரை 6 வெளியாகியுள்ளன. இந்த ஆறு நூல்களும் பெரும் வெற்றி பெற்றவை ஆகும். பல கோடி வசூலை இந்த நூல்கள் வாரிக் குவித்தன.இந்த நிலையில் ஹாரி பாட்டர் வரிசையில் 7வது மற்றும் கடைசி நூலான ஹாரிபாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் என்ற நூல் இன்று வெளியிடப்பட்டது. நியூயார்க் நகரில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ரெளலிங் தனது 7வது நூலை புத்தகப் பிரியர்களின் ஆர்ப்பரிக்கும் கோஷத்திற்கு மத்தியில் வெளியிட்டார்.
பின்னர் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை அவர் வாசித்துக் காட்டினார். இதையடுத்து விற்பனை தொடங்கியது. ஹாரிபாட்டர்-7 நூலை வாங்க ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மிகுந்த உற்சாகத்துன் புத்தகத்தை வாங்கிச் சென்றனர். வாங்கிய வேகத்தில் பலர் படிக்க உட்கார்ந்து விட்டனர்.
உலகெங்கும் கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் ஹாரிபாட்டர்-7 நூலை வாங்க முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே நூல்கள் விற்றுத் தீர்ந்து விட்டன.
முதல் நாளிலேயே 1 கோடி புத்தகங்கள் விற்று விட்டதாக கூறப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் ஹாரி பாட்டர் நூல்கள் படு வேகமாக விற்று தீர்ந்து வருகின்றன.
இந்தியாவிலும் இன்றே ஹாரி பாட்டர்-7 விற்பனைக்கு வந்துள்ளது. சென்னையில் லேண்ட்மார்க் உள்ளிட்ட சில பிரபல கடைகளில் ஹாரிபாட்டர் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. விலை அதிகம் (ரூ. 975) என்றபோதிலும் கூட பலரும் ஆர்வத்துடன் நூல்களை வாங்கிச் செல்கின்றனர்.
உலகச் சிறுவர்களின் மனம் கவர்ந்த மாயாஜால மந்திர நாயகனான ஹாரிபாட்டர், சிறுவர்களை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவர்ந்து விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.