ஆப்கானில் 18 தென் கொரிய கிறிஸ்துவர்கள்கடத்தல்-கொல்லப் போவதாக தலிபான் மிரட்டல்
காபூல்:ஆப்கானிஸ்தானில் 15 பெண்கள் உள்பட 18 தென் கொரிய கிறிஸ்துவர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை கொலை செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படையுடன் தென் கொரிய ராணுவமும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தென் கொரியாவைச் ேசர்ந்த 200 வீரர்கள் ஆப்கனில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் தலிபான் தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு தென் கொரிய ராணுவ வீரர்கள்தான் காரணம் என நினைத்த தலிபான்கள், சில தினங்களுக்கு முன்பு கந்தஹார் அருகே பஸ்ஸில் வந்த தென் கொரியாவைச் சேர்ந்த 18 கிறிஸ்துவர்களை கடத்தி சென்றனர்.
இதுகுறித்து தலிபான் அமைப்பைச் சேர்ந்த யூசூப் அஹ்மதி என்பவர் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,
பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இவர்கள் உயிருடன் திரும்ப வேண்டுமானால், ஆப்கானிஸ்தானில் இருக்கும் தென் கொரியப் படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் 18 பேரையும் கொன்றுவிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
கடத்தி செல்லப்பட்ட 18 பேரில் 15 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ் உத்தரவு:
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் கைது செய்யப்படும் தீவிரவாதிகளை விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க படையினரிடம் சிக்கும் தீவிரவாதிகளை செக்ஸ்ரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும், விசாரணை என்ற பெயரில் ஆடைகளை கழற்றி நிர்வாண நிலையில் அவர்களின் மீதுஅதிக அழுத்தத்துடன் தண்ணீர் பாய்ச்சி கொடுமைப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
மேலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் முஸ்லீம் பெண்களை அமெரிக்க படையினர் கற்பழிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து கைது செய்யப்படும் எவரையும் விசாரணை என்ற பெயரில் எந்தவொரு சித்ரவதைக்கும் ஆளாக்கக் கூடாது என புஷ் அமெரிக்க ராணுவ உயரதிகாரிகளுக்கும், புலனாய்வுப் பிரிவினருக்கும் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.