இலங்கை ராணுவத்தின் பலாத்கார பயம்:விஷம் குடித்த தமிழ்ப் பெண்!
யாழ்ப்பாணம்:இலங்கை ராணுவத்தின் விசாரணையின்போது பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் 3 குழந்தைகளுக்குத் தாயான தமிழ்ப் பெண் விஷம் அருந்தினார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ராணுவம், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் கொஞ்சம் கூட சுணக்கம் காட்டவில்லை.
அப்பாவித் தமிழர்கள் சாவது தினசரி நடந்து வருகிறது. கொடுவில் என்ற பகுதியில், ஆடியபாதம் சாலையில், மோட்டார் சைக்கிளில் வந்த ராணுவ வீரர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒரு தமிழர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்லத்துரை சண்முகராஜா என்கிற 56 வயது தொழிலதிபர் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதை விட கொடுமையாக இலங்கை ராணுவத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த ஒரு தமிழ்ப் பெண் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பொன்னம்பலம் புவனேஸ்வரி (44) என்கிற அந்தப் பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ராணுவ விசாரணைக்காக, தனியாக முகாமுக்கு வருமாறு ராணுவம் அவரை அழைத்திருந்தது. ஆனால் தனியாகப் போனால் நிச்சயம் பாலியல் சித்திரவதைக்கு ஆளாக நேரிடும் என்று பயந்து போன அந்தப் பெண்மணி, விஷம் அருந்தி விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.