சென்ட்ரலில் தாதர் எக்ஸ்பிரஸ் கவிழ்ந்தது:ரயில் போக்குவரத்து 4 மணி நேரம் பாதிப்பு
சென்னை:மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதனால் பல ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன. சுமார் 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும். இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த ரயில் ரயில்வே யார்டில் இருந்து ரயில் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
ரயில் நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தபோது இந்த ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டு இரு தண்டவாளங்களுக்கு இடையே கவிழ்ந்தன.
இதனால் இந்த இரு தண்டவாளங்களிலும் செல்லும் ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. மேலும் சென்ட்ரலில் இருந்து கிளம்ப வேண்டிய ரயில்களும் நிறுத்தப்பட்டன.
சுமார் 3 மணி பேராட்டத்துக்குப் பின் கவிழ்ந்த பெட்டிகள் நிலை நிறுத்தப்பட்டன. இதையடுத்து அந்த ரயில் 10 மணிக்கு மும்பைக்குக் கிளம்பிச் சென்றது.
இந்த விபத்தால் கோரமண்டல் எக்ஸ்ிபரஸ், அகமதாபாத் எக்ஸ்பிரஸ், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் பல மணி நேரம் தாமதமாகக் கிளம்பிச் சென்றன.
அதே போல சென்னைக்கு வந்து கொண்டிருந்த பெங்களூர் எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கொச்சின் எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், அரக்கோணம் எக்ஸ்பிரஸ் ஆகியவை வழியிலேயே நிறுத்தப்பட்டு பல மணி நேரம் தாமதமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தன.
இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.