கோதுமை இறக்குமதி-விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
சென்னை:வெளிநாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்வதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஆஸ்திரேலியாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்து வருகிறது. இந்த கோதுமை அசுத்தமாக இருப்பதாகவும் விலையும் அதிகமாக இருப்பதாகவும் தமிழக விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. மேலும் இதன் இறக்குமதியை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கே.செல்லமுத்து நிருபர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசின் இந்த இறக்குமதி கொள்கை இந்திய கோதுமை பயிரிடும் விவசாயிகளுக்கு எதிராக அமைந்துள்ளது. நமது நாட்டில் ஆண்டிற்கு 7.48 கோடி டன் கோதுமை விளைகிறது. கடந்த வருடத்தில் கோதுமை விளைச்சல் 6.93 கோடி டன்னாக இருந்தது.
இந் நிலையில் மத்திய அரசு தரமில்லாத கோதுமையை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது.
விவசாயிகள் இரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கிறார்கள். ஆனால் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இவர்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக சந்தையில் கொண்டுபோய் விற்கவும் முடியவில்லை. இதில் இடைத்தரகர்களின் அட்டகாசம் அதிகம்.
இவர்களை ஒழித்து கட்டி, விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து மக்களிடம் கொண்டு போய் விளைபொருட்களை சேர்க்கும் ரிலையன்ஸ் ரீடைல் கடைகளை நாங்கள் வரவேற்கிறோம்.
அதுமட்டுமல்லாது, விவசாயிகளுக்கு சரியான விலையையும் அவர்கள் கொடுக்கிறார்கள். இத்தனை வருடமாக இடைத் தரகர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அதிலிருந்து மீட்க ரிலையன்ஸ் போன்ற கடைகள் வர நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி கடன் கொடுக்க உத்தரவிட்டுள்ளதற்காக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகளுக்கு அடமான கடன்கள் தருவது குறித்தும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கவுள்ளோம் என்றார் செல்லமுத்து.