வளைகுடா: இந்திய பணிப்பெண்களுக்கு உதவதூதரகங்களில் 24 மணி நேர ஹெல்ப்லைன்!
துபாய்:வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை பார்த்து வரும் இந்தியப் பெண்களுக்கு உதவ இந்தியத் தூதரகங்களில் 24 மணி நேர ஹெல்ப்லைன் ஏற்படுத்தப்படவுள்ளது.
வளைகுடா நாடுகளில் ஏராளமான பெண்கள் வீட்டு வேலை பார்த்து வருகின்றனர். வேலை பார்க்கும் இடங்களில் இவர்கள் பல துயரங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக பாலியல் ரீதியிலான சித்திரவதைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந் நிலையில் வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்குச் செல்லும் இந்தியப் பணிப்பெண்களுக்கு உதவ, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் 24 மணி நேர ஹெல்ப்லைனை ஏற்படுத்த மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இத்துறையின் செயலாளர் நிர்மல் சிங் கூறுகையில், இந்தப் புதிய வசதி குறித்த விரிவான விவரங்களை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. செப்டம்பர் 1ம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.
அனைத்து இந்தியத் தூதரகங்களிலும் 24 மணி நேர ஹெல்ப்லைன் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன என்றார்.
ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்த உத்தரவும் தங்களுக்கு வரவில்லை என்று துபாயில் உள்ள இந்திய தூதர் வேணு ராஜாமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே 24 மணி நேர ஹாட்லைன் வசதி உள்ளது. 050-9433111 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை பணிப்பெண்கள் கூற முடியும். எப்போதெல்லாம் எங்களுக்குப் புகார் வருகிறதோ, உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை நாங்கள் தொடர்பு கொண்டு குறைகளைத் தீர்க்க முயற்சிக்கிறோம் என்றார் அவர்.