பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிச்சயம்!
டெல்லி: பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலும், அந்த நிறுவனங்களின் நஷ்டம் கட்டுக்கடங்காமல் போய் வருவதாலும் பெட்ரோல் டீசல் விலையை கணிசமாக உயர்த்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அதனால் பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக உயர்த்த வேண்டும் என எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
சட்டசபைத் தேர்தல் உள்ளிட்ட ஓட்டு வங்கிப் பிரச்சினையால் இந்த விவகாரத்தை இத்தனை நாட்களாக தள்ளிப் போட்டு வந்தது மத்திய அரசு.
தற்போது தேர்தல் எதுவும் இல்லாத நிலை மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து சந்தித்து வரும் நஷ்டம் ஆகியவற்றைக் கணக்கிட்டு பெட்ரோலியப் பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்த தீர்மானித்துள்ளது.
இதை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா சூசகமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பெட்ரோலிய பொருட்களின் விலைகள் உயருமா என என்னால் திட்டவட்டமாக கூறமுடியாது. விலையை உயர்த்தாமல் நிலைமையை சமாளிக்க பல வழிகளை முயற்சி செய்து வருகின்றோம்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் பதவியேற்றபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பல மடங்கு அதிகரித்தது. அதை சமாளிக்கும் வகையில் டீசல், பெட்ரோல் விலையை அரசு உயர்த்தியது. பின்பு கச்சா எண்ணெயின் விலை சர்வதேச மார்கெட்டில் குறைந்தது.
இடது சாரி கட்சிகள், சர்வதேச சந்தையில் விலை குறைந்தால் இங்கும் விலையை குறைக்க வேண்டும் என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கடந்த பிப்ரவரியில் டீசல் லிட்டருக்கு 1 ரூபாயும், பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாயும் குறைக்கப்பட்டன.
பிப்ரவரிக்கு பிறகு கச்சா எண்ணெயின் விலை மீண்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது. 1 பேரல் கச்சா எண்ணெய் 72.31 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது பிப்ரவரி மாதத்திற்கு முன்பிருந்த விலையை விட 14 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டில் விலையை அதிகரிக்காததால் அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
இதைத்தவிர சமையல் காஸ், கெரசின் தயாரிப்பு விலையை விட குறைவாக விற்பனை செய்வதால் பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவற்றுக்கு தினமும் ரூ.195 கோடி நஷ்டம் அடைகிறது. இந்த நிலைமை தொடருமானால் 1 வருடத்தில் 55ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் வந்து நிற்கும்.
விலையை உயர்த்த கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கும் இடதுசாரி கட்சிகளிடம் நிலைமையை விளக்கியுள்ளோம். பிரதமரிடமும் எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கையையும், அடைந்து வரும் நஷ்டத்தையும் பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
நஷ்டத்தை சமாளிக்க பத்திரங்கள் வெளியிட்டும், ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வருவாய் மூலமும் ஈடுசெய்ய நிதி அமைச்சகத்திடமும் தெரிவித்துள்ளோம் என்றார்.
இன்னும் சில தினங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.