சினிமா வினியோகஸ்தரிடம் ரூ. 2.2 லட்சம்பணம் கொள்ளை- டிரைவர் கைது
சென்னை:வேலை பார்த்த இடத்திலேயே ரூ. 2.2 லட்சத்தை திருடிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மைலாப்பூரைச் சேர்ந்தவர் காளப்பன்(51) திரைப்பட விநியோகஸ்தராக இருக்கிறார்.
இது தவிர பல தியேட்டர்களை லீசுக்கு எடுத்தும் நடத்தி வருகிறார். வல்லவன், தாமிரபரணி ஆகிய படங்களை செங்கல்பட்டு ஏரியாவில் வினியோகம் செய்தவர்.
ஹாரி பாட்டர் பட விநியோக உரிமையை வாங்க இருக்கிறார்.
கடந்த 12ம் தேதி தனது வீட்டிலிருந்து ரூ. 2.28 லட்சம் பணத்துடன் சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு காரில் கிளம்பினார். அதை இவரது டிரைவர் வெங்கடேஷ் (28) ஓட்டிச் சென்றார்.
வழக்கமாக காரை மெளண்ட் ரோட்டில் காசினோ தியேட்டர் அருகில் நிறுத்திவிட்டு இறங்கிச் செல்வார் காளப்பன்.
வெங்கடேசிடம் பணத்தை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சென்றார். ஆனால் திரும்பி வந்தபோது டிரைவர் பணத்தை எடுத்துக் கொண்டு காரையும் பூட்டிவிட்டு ஓடிவிட்டார்.
இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் காளப்பன். டிரைவர் வெங்கடேஷ் 10 நாட்களுக்கும் முன்புதான் இவரிடம் வேலைக்கு சேர்ந்தாராம்.
இதையடுத்து தனிப்படை போலீசார் வெங்கடேஷைத் தேடி அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் சென்று விசாரித்தனர்.
அவர் மலேசியா செல்ல திட்டமிட்டிருந்ததும் , அதற்காக வெளிநாடு அழைத்து செல்லும் ஏஜெண்டிடம் பணத்தை கொடுக்க ராமநாதபுரம் வர இருப்பதும் தெரியவந்தது.
ஆனால், அவர் சென்னையில் தான் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதைடுத்து போலீசார் ரயில், பஸ் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில் சென்னைகோயம்பேடு பஸ் நிலையத்தில் வைத்து டிரைவர் வெங்கடேஷ் மாட்டினார்.
வெங்கடேஷிடமிருந்து ரூ. 1.54 லட்சம் மீட்கப்பட்டது. மீதிப்பணம் ரூ. 74,000த்தை நண்பர்களுடன் சேர்ந்து குடித்தும், பெண்களோடு உல்லாசமாகவும் இருந்து செலவழித்துவிட்டதாக போலீசில் கூறியுள்ளார் வெங்கடேஷ்.
கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.