அரசு விழாவை புறக்கணித்த பீட்டர் அல்போன்ஸ்
குற்றாலம்:குற்றாலத்தில் நடைபெற்ற சாரல் திருவிழாவை திமுக கூட்டணியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளே தவிர்த்தனர்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் தான் திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் அரசு விழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறு.
திமுக தலைமையிலான தமிழக அரசு நடத்தும் விழாக்கள் என்றாலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ, எம்பிக்கள் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்கள்.
குற்றாலத்தில் நடந்த சாரல் விழாவில் எம்எல்ஏக்கள் அப்பாவு, கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் மட்டும்தான் கலந்து கொண்டனர். இம் மாவட்டத்தைச் சேர்ந்த வேறு எந்த மக்கள் பிரதிநிதியும் கலந்து கொள்ளவில்லை.
விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் காரில் குற்றாலத்தை பார்த்துக் கொண்டே சென்று விட்டாராம்.
இதேபோல் அதற்கடுத்த நாள் தென்காசியில் நடைபெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை வழங்கும் விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர் பூங்கோதை, எம்பி அப்பாத்துரை ஆகியோர் மட்டும் கலந்து கொண்டார்கள்.
எந்த தொகுதியில் அரசு விழா நடக்கிறதோ அந்த தொகுதி எம்எல்ஏவே வரவில்லை.
ஒருவேளை கடை திறப்பு விழா, தொழிற்சாலை திறப்பு விழா என்றால் செல்வார்களோ. அதில் தானே கவனிப்பு, உபசரிப்பு எல்லாம் இருக்கும்.