சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி:சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நீதிபதி அசோக்குமாரை நியமித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அசோக் குமார் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் சாந்தி பூஷன் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில், நீதிபதி அசோக்குமாரை நிரந்தர நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனக் குழு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால் அதையும் மீறி அசோக்குமார் நிரந்தர நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயரை ஏற்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவித்தது சட்டவிரோதமானதாகும். விதிமுறைகளை மீறி உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட யாருக்கும் அதிகாரம் கிடையாது.
எனவே அசோக்குமாரின் நியமனம் சட்டவிரோதமானதாகும். மூத்த நீதிபதிகள் அடங்கிய நீதிபதி நியமனக் குழுவின் முடிவை மீறி அசோக் குமார் நியமிக்கப்பட்டது செல்லாது என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அரிசித் பச்சாயத், நீதிபதி டி.கே.ஜெயின் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், கடந்த 1999ம் ஆண்டு முதல் உயர்நீதிமன்றங்களில் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களின் பட்டியல் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், உயர்நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலையும், அவர்கள் நிரந்தரமாக்கப்பட்டது குறித்த விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சையில் சிக்கியுள்ள நீதிபதி அசோக் குமார் சமீபத்தில் தனது மணி விழாவையொட்டி முதல்வர் கருணாநிதியை தனது குடும்பத்துடன் சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.