மலேசியா: கணவரைக் கொன்று துண்டு துண்டாக்கிஃபிரிட்ஜில் வைத்த மனைவி
கோலாலம்பூர்:கணவரைக் கொலை செய்து அவரது உடலை 11 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் பதுக்கி வைத்திருந்த பெண்ணை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை ஒருவர் வாங்கினார். அந்த வீடு கடந்த 3 மாத மூடப்பட்டிருந்தது. இதனால் ஒருவரை அனுப்பி சுத்தம் செய்யப் பணித்திருந்தார்.
அதன்படி அந்த நபரும் வீட்டை சுத்தம் செய்வதற்காகச் சென்றார். அப்போது வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து வீட்டு உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தார். அவரும் விரைந்து வந்தார்.
இருவரும் வீட்டில் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என்று பார்த்தபோது வீட்டின் சமையலறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்துதான் (ஃபிரிட்ஜ்) வாசனை வருவது தெரிய வந்தது.
இதையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்தேபாது அதில் ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது தெரிய வந்து அதிர்ந்தனர்.
அந்தப் பிணம் 11 துண்டுகளாக வெட்டப்பட்டு பாலிதீன் பைகளில் போட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கொலையைச் செய்தது அந்த ஆணின் மனைவி என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கொல்லப்பட்ட நபர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். கொலை செய்த அந்தப் பெண் சரவாக் என்ற இடத்தைச் சேர்ந்தவர். விமானப் பணிப்பெண்ணாக அவர் பணியாற்றி வருகிறார்.
இதையடுத்து தீவிர வேட்டை நடத்திய போலீஸார் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர். அப்பெண்ணுடன், அவரது காதலரும் சேர்ந்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. காதலருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
கள்ளக் காதலில் இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் கோலாலம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.