மிசா கைதிகளுக்கு ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
சென்னை:மொழிப்போர் தியாகிகளுக்கு வழங்கப்படுவது போல மிசா கைதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு மிசா கைதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான இடும்பையன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் நாட்டில் அவசர நிலை சட்டம் (மிசா) பிரகடணப்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் இந்திரா காந்திக்கு எதிராக செயல்பட்ட அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளானார்கள்.
மிசா சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளப்பட்டவர்கள் மிகுந்த இன்னல்களுக்குப் பிறகே விடுவிக்கப்பட்டனர். தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முரசொலி மாறன் ஆகியோரும் கூட மிசா கைதியாக சிறையில் சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகரும், மிசா கைதியுமான ஆர். இடும்பையன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மொழிப் போர் தியாகிகளுக்கு வழங்குவது போல மிசா கைதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அவர் கூறுகையில், மொழிப் போர் தியாகிகளுக்கு தற்போது மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, மிசா கைதிகளுக்கும் வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் 3000 பேர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருச்சி மத்திய சிறையில், 114 பேர் அடைக்கப்பட்டனர். அவர்களில் 45 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர்.
மிசா சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றவர்கள், கடந்த 41 ஆண்டுளாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தினசரி குடும்பத் தேவைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களது நிலை குறித்து முதல்வர் கருணாநிதிக்கும், மூத்த அமைச்சர்களுக்கும் பலமுறை கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதுவரை எங்களது துயரம் தீரவில்லை.
உ.பி. மாநிலத்தில், மிசா கைதிகளுக்கு மாதம் ரூ. 1000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல தமிழகத்திலும் மிசா கைதிகளுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இடும்பையன்.