வெள்ளை ரவியை மாட்டி விட்ட காதலி நடிகை!
சென்னை:வெள்ளை ரவியின் கள்ளக் காதலியான நடிகை சானியா கொடுத்த தகவலின் மூலம்தான் ரவியை சுற்றி வளைத்து போலீஸார் என்கெளண்டரில் போட்டுத் தள்ளியுள்ளனர்.
வட சென்னையை உலுக்கி வந்த வெள்ளை ரவீ சமீபத்தில் ஓசூர் அருகே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். சென்னை தொழிலதிபர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் படு தீவிரமாக ரவியைத் தேடி வந்தது போலீஸ்.
ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் கர்நாடகத்திற்கும், ஆந்திராவுக்குமாக அலைபாய்ந்து தலைமறைவாக இருந்து வந்தான் ரவி. இந்த இடைப்பட்ட காலத்தில் ரவியின் கள்ளக் காதலியான சானியா என்பவர் சிக்கினார்.
இவர் ஒரு துணை நடிகை. சிவாஜி படத்தில் கூட நடித்துள்ளார். இவரைக் கைது செய்து விசாரித்த போலீஸ் ரவி குறித்த பல தகவல்களை சானியாவிடமிருந்து கறந்துள்ளனர். பின்னர் சானியாவை புழல் மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.
ரவி குறித்த சில முக்கியத் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. ரவிக்கு நெருக்கமான சிலரை வளைத்துப் பிடித்து விசாரித்தும் கூட ரவி குறித்து அவர்கள் வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில்தான் சானியா மூலம் அவர்களுக்கு பல முக்கியத் துப்புக்கள் கிடைத்தன. தலைமறைவாக இருந்த வெள்ளை ரவி ஆசை நாயகி சானியாவுக்காக லட்சக்கணக்கில் பணத்தை தண்ணீராக இறைத்துள்ளான்.
போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையிலும் கூட, சத்தம் போடாமல் பெரம்பூரில் இருக்கும் சானியாவின் வீட்டிற்கு வந்து சல்லாபித்து விட்டுப் போனானாம் ரவி.
தேவைப்படும் போதெல்லாம் சானியாவுக்கு பணம் அனுப்பியும் வந்துள்ளான். இந்த சானியாவுக்கு ஏற்கனவே சபிபுல்லா என்பவருடன் திருமணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த வாரம் புழல் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்த சானியாவை உளவுப் பிரிவினர் கண்காணித்தனர்.
அவருக்கு ரவியுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டதை உறுதி செய்த உளவுப் பிரிவினர் அதை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து குற்றப் பிரிவு போலீசார் சானியாவை பிடித்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது தான் வெள்ளை ரவி ஹூப்ளியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருக்கும் தகவலைச் சொன்னார் சானியா.
இதையடுத்து ஜாங்கிட் தலைமையில் ஹூப்ளி விரைந்த போலீஸார் அங்கு வைத்து ரவியை கார்னர் செய்தனர்.
அவனது நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்தபடி இருந்தனர். அவனை பாலோ செய்து வந்த டீம் ஒசூர் அருகே வைத்து கதையை முடித்தது.
ஹூப்ளி லாட்ஜில் வெள்ளை ரவியுடன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவனும் தங்கியிருந்திருக்கிறான். ரவி போலீஸாரிடம் சிக்குவற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவன் அங்கிருந்து வெளியேறி விட்டான். அதன் பின்னர் அவன் வரவே இல்லை.
அவன் யார், அவனுக்கும், ரவிக்கும் என்ன தொடர்பு என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.