தமிழக- கேரள எல்லையில் லாரி டிரைவர் படுகொலை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு என்ற இடத்தில் கேரள மாநில வணிக வரி, கலால், போக்குவரத்து உள்ளிட்ட சோதனை சாவடிகள் உள்ளன.
இந்த சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்படும்போது பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கை.
அதேபோல நேற்று நள்ளிரவு தமிழகத்தைச் சேர்ந்த காந்தி என்ற ஓட்டுனர் கேராளவுக்கு லாரியில் சரக்கு ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது பிற லாரிகளை முந்தி செல்ல முற்பட்டுள்ளார். ஏற்கனவே பல மணி நேரம் அங்கு டிராபிக் ஜாம் ஆனதால் அப்பகுதியை சார்ந்த இளைஞர்கள் இந்த போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது டிரைவர் காந்திக்கும், அந்த இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதில் அந்த இளைஞர்கள் காந்தியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இது குறித்து தென்மலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.