டாடா ஆலையை மக்கள் எதிர்க்கிறார்கள்-ராமதாஸ்
வள்ளியூர்:டாடாவுடன் என்ன ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதையும் இந்தப் பகுதி மக்களிடம் அரசு ஒளிவுமறைவின்றி விளக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
டாடா நிறுவனம் அமைக்கவுள்ள கார்ெனட் தொழிற்சாலை குறித்து மக்களிடம் கருத்துக் கேட்க தான் அமைத்த பாமக குழுவுடன் இன்று தொழிற்சாலை அமையவிருக்கும் பகுதிக்கு வந்தார் ராமதாஸ்.
அங்கு நிருபர்களிடம் அவர் கூறியதாவது
டாடா நிறுவனம் சாத்தான்குளம், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 80 கி.மீ. சுற்றளவில் டைட்டானியம் ஆலை நிறுவுவது குறித்து மக்கள் கருத்தறிய பாமக குழு அமைத்தது. இந்தக் குழு பல இடங்களில் மக்களிடம் கருத்துக் கேட்டது.
இதில் தேரி நிலம் வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டத்தை முழுமையாக எதிர்ப்பது தெரியவந்தது.
ஏற்கனவே இந்தப் பகுதி மக்கள் கார்னெட் மண் அள்ளும் தொழிலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இந்தப் பகுதியில் உள்ள தனியார் கார்னெட் மணல் ஆலைகளை (இந்த மணல் அள்ளி வெளிநாடுகளுக்கு விற்பதில் முன்னணியில் இருப்பவர் ஜெயா டிவியின் பார்ட்டனர் வைகுண்டராஜன் தான்) அரசு கையகப்படுத்த வேண்டும்.
தேரி நிலம் என்பது வளமான பகுதி, பாலைவனம் அல்ல. இங்கு முந்திரி, பனை, தென்னை, வாழை, சவுக்குத் தோட்டங்கள் ஏராளமாக உள்ளன.
இந்தப் பகுதியில் தண்ணீர் வசதி இல்லை என்பது வறட்டு வாதம். இப் பகுதியில் இயற்கையாக உருவான மணல் குன்றுகளை அகற்றினால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படும்.
டைட்டானியம் தாது எடுக்கப்பட்ட நிலத்தை மீண்டும் பயன்படுத்த பல தலைமுறைகள் ஆகிவிடும்.
இந்த ஆலை தொடர்பாக அரசு அமைத்த 6 பேர் கொண்ட குழுவை வரவேற்கிறேன். முதலில் திட்டம் குறித்து மக்களிடம் விளக்கிவிட்டு, உரிய கால அவகாசம் தந்து, அவர்களது கருத்தை றிய வேண்டும்.
டாடாவுடன் என்ன ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதையும் இந்தப் பகுதி மக்களிடம் ஒளிவுமறைவின்றி தெரிவிக்க வேண்டும்.
திட்டப் பகுதியின் வரைபடம், பாதிக்கப்படும் மக்களுக்கு என்ன மறுவாழ்வு திட்டம், எத்தைன பேருக்கு வேலை, அரசுக்கு என்ன லாபம், எத்தனை ஆண்டு இந்த ஆலை இங்கிருக்கும் என அனைத்து விவரங்களையும் டாடா நிறுவனமும் மக்களிடம் தர வேண்டும் என்றார் ராமதாஸ்.