என் வழக்குகளை வாபஸ் பெறக் கூடாது- கேரள அரசுக்கு மதானி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கொச்சிகேரள நீதிமன்றங்களில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டாம் என கோவை குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி கோரியுள்ளார்.

கொச்சியில் செய்தியாளர்களிடம் மதானி பேசுகையில், என்னைப் பொருத்தவரை, தவறு செய்தவர்களை சட்டம் தண்டிக்க வேண்டும். நான் தவறு செய்திருந்தால் என்னை சட்டம் தண்டிக்கட்டும். இல்லாவிட்டால் என்னை விடுவிக்கட்டும்.

என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் பொய் என்பது நீதிமன்றங்களில் நீருபணமாகும்.

நீதித்துறை மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். என் மீதான வழக்குகளில் நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

என் மீது உள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என நான் யாரையும் கேட்டுக் கொள்ளவில்லை. வாபஸ் பெற வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

கேரள இடதுசாரி அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. எனவே இந்த அரசுக்கு எங்களது கட்சி கொடுத்து வரும் ஆதரவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை.

பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் நலனுக்காகவே எங்களது கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லீம்களை தலித் என்றும் தலித் அல்லாதவர்கள் என்றும் தரம் பிரிப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் நலனைக் கருதித்தான் அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகள் நான் சிறையில் இருந்த காலத்தில் எனது தவறுகளை புரிந்து கொண்டு, என்னைத் திருத்திக் கொள்ள உதவியுள்ளது.

எனது பேச்சுக்களில், தவறு செய்பவர்களை நான் கண்டித்துள்ளேன். அவை அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இனிமேல் அதுபோன்ற கடுமையான விமர்சனங்களை நான் குறைத்துக் கொள்வேன்.

முஸ்லீம் லீக்குடன் எனது கட்சி எந்த உறவையும் வைத்துக் கொள்ளாது. எனது கட்சி முஸ்லீம்களுக்கான கட்சி மட்டும் அல்ல. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காக பாடுபடும் கட்சி.

கேரளாவில் 3வது அணியை அமைப்பது குறித்து எங்களுடன் சிலர் பேசினர். ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.

நானோ அல்லது எனது கட்சித் தொண்டர்களோ, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. ஆனால் சமூகப் பொறுப்புடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

நான் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரசுப் பதவி எதிலும் அமரும் எண்ணமும் எனக்கு இல்லை.

நான் கோவை சிறையில் இருந்தபோது எனக்கு உரிய மருத்துவ உதவிகள் கிடைப்பதற்காக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் பாடுபட்டார். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்றார் மதானி.

மதானி மீது கேரளாவில் உள்ள 2 நீதிமன்றங்களில் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+